முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : தேநீர்க் கோப்பை


பாகம் மூன்று : தேநீர்க் கோப்பை 

அன்று அமிர்தலிங்கத்தின் தேநீர்க் கோப்பையில் விழுந்து தெறித்த ரத்தம் துரோகத்தின் பரிசா? இல்லை நயவஞ்சகத்தின் முதலடியா? இதுவரை தெரியவில்லை அவளுக்கு.

அப்பிடி கண்ணிமைக்கும் நொடியில் தமிழருக்கு விடிவு கொண்டுவாறமாதிரி தீர்வுதர ராஜீவ் காந்தி ஒண்டும் மகாபுருசரில்லை என்பது அவளுக்கு நிச்சயமாய்த் தெரியும். அதுவும் இப்ப பிரதமராய் இல்லாமலேயே அவரின் மனுசிக்கு இருக்கிற பவர்லை, தில்லிலை ஒரு கால்ப் பங்காவது அப்ப பிரதமராய் இருந்த அந்த மனுஷனுக்கு இருந்துதோ தெரியாது.

இட்டாலியன் ஹை-டீ குடிச்சுக்கொண்டு கதைக்கிரவன்களிட்டை போய், "தமிழருக்கு ஒரு நல்ல தீர்வு தாங்கோ ஐயா.." என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களும் ஏதோ போனால் போகுதெண்டு போட்ட பிச்சையை அம்பாரியில் தூக்கிக்கொண்டுவந்து, "தமிழனுக்கு விமோச்சனம் தந்த கலைஞர்.. மன்னிக்கவும்.. ராஜீவ்காந்தி வாழ்க..!" எண்டால் யாருக்குத்தான் கடுப்பாயிராது. ஆனால் கொல்லுமளவுக்கா போயிருப்பார்கள்? அதுவும் "கொஞ்சம் தேத்தண்ணி கொண்டாங்கோ" என்று கேட்டு வங்கிக் குடித்துவிட்டு..

அந்த நேரத்தில் இருந்த எந்தவொரு இயக்கங்களுமே பொதுவாகப் பார்த்தால் அடிப்படைக் கொள்கை என்னமோ ஒன்று தான். ஆனால் அதை யார் செயல் படுத்துவது, பெயரெடுப்பது என்பதில் தான் போட்டியிருந்ததாகத் தோன்றுகிறது. அதனால், அதற்கு குறுக்கை வரும் யாரையுமே அழித்தொழிக்க எந்த இயக்கங்களுமே தயங்கவில்லை. அது வளர்த்து விட்டவர்களாய் இருந்தாலென்ன, சொந்த சகோதரனாய் இருந்தாலென்ன; அவர்களது ஓரேபதில் துப்பாக்கி தான்.
தமிழருக்கு தீர்வென்று ஒன்று வந்தால் அது தம்மால் மட்டுமே கொண்டுவர முடியும், சரியாக நடைமுறைப் படுத்த முடியுமென ஒவ்வொருவரும் வலுவாக நம்பினர். ஆனால் புலிகள் மட்டுமே அவ்வாறு மக்களையும் சேர்த்து நம்பவைப்பதில் வெற்றிகண்டிருந்தனர். அவர்கள் கட்டியெழுப்பிய அந்தக்  கனவு தேசம் மக்களை வியப்பிலாழ்த்தியது. அவர்கள் தமது நாட்டின் கலாசாரம், பொருளாதாரம், சட்ட ஒழுங்கை பாதுகாப்போம் என்று எந்த அரசியல் மேடை போட்டும் வாய்கிழியக் கத்தவில்லை. ஆனால் செய்துகாட்டினார்கள். சொல்வீரத்தைவிட செயல் வீரத்தில் அதிக அக்கறை செலுத்தினார்கள். 

"சாப்பிட்டே வந்தனீங்கள்? கொஞ்ச ரொட்டி கிடக்கு தரட்டுமே?" அவள் அம்மாதான் கேட்டது. இண்டைக்கு எப்படியும் வீட்டைவிட்டு எழும்பவேண்டி இருக்கும் எண்டதால, ரெண்டு நாளைக்குரியதா ரொட்டி சுட்டுக் கட்டிக்கொண்டிருந்தா.
"இல்லையம்மா, இன்னும் கொஞ்ச நேரத்திலை கொண்டுவந்து தருவாங்கள். வெறும் தேத்தண்ணி மட்டும் எல்லாருக்கும் போடுங்கோ" என்றபடி முன்னால் நின்ற ஈரப்பலா மரத்தினடியில் நிலைஎடுப்பதுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த அந்த அக்காவைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ வலித்தது. 'பாவம் இவை. எங்களைக் காப்பாத்துறத்துக்காண்டி எவ்வளவு கஷ்டப்படுகினம். தங்கடை உயிரைக்கூட பொருட்படுத்தாது, தாங்கள் செத்து எங்களை வாழ வைக்கினமே' அவள் கண்கள் கலங்கின.

"இந்தாங்கோ அக்கா தேத்தண்ணி.." கொண்டுவந்தபோது எதோ சின்னக் குழல் போல கிடந்தது இப்ப பூட்டி முடிச்சபிறகு பெரிசா.. ஒருவேளை இதுதான் ஆட்லறியோ? திரும்பி ஒருமுறை அவர்களது வீட்டைப் பார்த்தாள். 'இனி கடவுள் தான் காப்பாத்தவேணும்..' மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

"உதிலை கிணத்துக்கட்டில வையும். பிறகு குடிக்கிறன். இது சரியா வேலை செய்யுதோ எண்டு முதலிலை  பார்க்கவேணும். " பேசாமல் வைத்துவிட்டு திரும்பியவளிடம், "நீர் என்ன வகுப்பு படிக்கிறீர்?"
"ஒன்பது.." தயங்கியபடியே.. 'எதுக்கு இப்ப கேக்கிறா?'
"ஓ.. நல்லா வளந்திருக்கிரீர் என்ன..?" அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னபோது தான் கவனித்தாள் அவ கூட கிட்டத்தட்ட அவள் உயரம் தான் இருந்தது. ஆனால் எப்படியும் ஒரு பதினெட்டு இருவது வயசிருக்கும்.
"அப்பிடித்தான் எல்லாரும் சொல்லுறவை.." வெட்கத்துடன் சிரித்தபடியே அவள் சொன்னபோது அவரது இறுக்கம் சற்றே தளர்ந்து மெலிதாய் புன்னகைத்தார்.

"உங்களுக்கு வேறை ஏதும் வேணுமெண்டாலும் கேளுங்கோ. நாங்கள் போறத்துக்கு முதல்லை எடுத்து தந்திட்டு போறம்.." சற்று யோசித்தவள் நிறுத்தி "இல்லாட்டி வீட்டுத்திறப்பை உங்களிட்டை தந்திட்டு போகச்சொல்லி அம்மாட்டை சொல்லட்டே?"
"அதெல்லாம் வேண்டாம்.. கொஞ்சம் பிழிஞ்ச தேங்காய்ப் பூ இருந்தா மட்டும் தந்திட்டுப் போங்கோ. குளிக்கிறத்துக்கு.." தேங்காய்ப் பூவில் குளிப்பதா? என்ன சொல்கிறார்.
"வெளியிலை பாத்ரூமிலை தண்ணிவரும். காலமைதான் அடிச்சது." என்றவள் தயங்கியபடி,  "அம்மாட்டை ரெண்டு புது சோப்பு இருக்கு. எடுத்து தரட்டா..?" கேட்கவும் அற்பமாய்ப் பார்த்தார்.
"நான் கேக்கிறதை மட்டும் குடுத்தால் போதும். இல்லாட்டி வேண்டாம்." அவர் குரல் தீர்மானமாய் இருந்தது.

"இந்தாங்கோ நீங்க கேட்ட தேங்காய்ப் பூ. அம்மா இப்பதான் எல்லாத்தையும் ரொட்டிக்கு போட்டுட்டா . இது இப்ப திருவிக் கொண்டுவந்தது.. போதுமே..?" கேட்டவள் அவரின் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்து, "காணாட்டி வளவிலை தேங்காய் இருக்கு.. அலவாங்கும் வெளியிலை தான் இருக்கு.." அவர் திரும்பி வினோதமாய்ப் பார்க்கவும் நிறுத்தினாள். 'சே.. என்ன இது அதிகப் பிரசங்கித்தனமாய்.. அவர்கள் போராட வந்தார்களா.. இல்லை இங்கயிருந்து சமையல் சாப்பாடு சாப்பிட வந்தார்களா?' இனி வாயே திறப்பதில்லை.

"ஆர்மி உத்தமன் சிலையடிக்கு வந்திட்டானாம். நாங்கள் அடிக்கத் தொடங்கப் போறம். கெதியா வீட்டைவிட்டு வெளிக்கிடுங்கோ" குடித்து முடித்த தேநீர்க்கோப்பையைத் தந்தபடி சொன்னவரிடம், தயங்கித் தயங்கி  "நீங்க அவங்களை திருப்பிக் கலைச்சுப் போடுவீங்கள் தானே..?  எத்தினை நாளேல்லை நாங்க திரும்பி வீட்டை வாறது?"  கேட்டேவிட்டாள்.

யோசனையாய் கைநகங்களைப் பார்த்தவர், "ரெட் ஆர்மி, கேள்விப் பட்டிருக்கிறியே?" கேட்டவாறே  அவள் கண்களை உற்றுநோக்கவும் தடுமாறிப் போனாள். அந்தத் தீர்க்கம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? ஒருவேளை கொள்கைப்பற்று என்பது இதுதானோ? அவரிடம் பயின்றவர்களாயிருக்குமோ? கேட்டுவிடலாமா?

"இல்லை.." அவள் சொல்லி முடிக்கவில்லை. "போராட வேணும்.. எல்லாரும் இறங்கிப் போராடவேணும்.. ஓடி ஓடி ஒளியிறத்தை விட்டிட்டு, வீட்டுக்கு வீடு.. வீதிக்கு வீதி நிண்டு போராடவேணும்.. படிச்சவன், படிக்காதவன்.. ஏழை, பணக்காரன்..  மாணவர்கள், தொழிலாளிகள் எண்டு எல்லாரும் ஒண்டு சேர வேணும்.." மூச்சுவிடாமல் ஆவேசமாகச் சொல்லியவர் சிறிது நிறுத்தி "அதுவரைக்கும் எங்களை யாராவது அடிமைப் படுத்திக்கொண்டு தான் இருப்பாங்கள்..." அவர்குரலில் சற்றே வேதனை தெரிந்தது. அவள் எதுவுமே புரியாமல் பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்,  "உனக்கு இப்ப இதெல்லாம் விளங்காது. விளங்கிறப்போ நாங்களெல்லாம் உயிரோட இருப்பமோ தெரியாது. ஆனால் எங்கடை கனவு இருக்கும். அது நிச்சயமாய் ஒருநாள் நனவாகும். அதுவரைக்கும் போராடுவோம்."

உண்மைதான். அவர் கூறிய எதுவுமே அன்றவளுக்குப் புரிந்திருக்கவில்லைத் தான். ஆனால் அந்த ஆவேசம் அவளுக்குள்ளும்  இறங்கியிருந்தது.




"போய் ரெண்டு ப்ளேன் டீ வாங்கிக் கொண்டு வா."
என்ன பாக்கிறீங்க..? நாளைய தலைமுறையை உருவாக்கப் போகிற அந்தக் campusல தான்.. 'அன்புத்தொல்லை' நடந்துகொண்டிருந்தது. கொண்டுவந்தாள்.
"உதிலை இருந்து குடி. உன்னோட கதைக்க வேணும்." இருந்தாள்.

"என்ன முறைக்கிறே? உனக்கு டீ போடத்தெரியுமே?" மௌனமாயிருந்தாள். 'ஓம்' எண்டால் அந்த ரெண்டு பக்க செய்முறை விளக்கம் சொல்ல வேணும். 'இல்லை' எண்டாலும் தான்.

"நான் கேக்கிறன், சீனியர் எண்டு ஒரு மரியாதையில்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய் என்ன? உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே?"  அவள் பேசாமல் அவன் கைகளிலிருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்தாள். 
'எங்கள் கனவு, மாணவர் கைகளில்..'
"இப்ப நீ வாயைத் திறக்கப் போறியா.. இல்லை..." அவளிடம் எந்தவித சலனமுமில்லை. அவனுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. கோபத்தைப் போய் சிகரட்டில் காட்டினான்.
'தாழம் பூவின் நறுமணம் தவழும் நம் பூமியில் 
நச்சுக்காற்றை சுவாசிக்கின்றனர் நம் பிஞ்சுகள்'
பாதியில் போட்ட சிகரட்டை அணைக்காமலே வேகமாக வந்து "இப்பிடியே இருந்தாய் எண்டா இங்கை ஒரு கொலை விழும்.."
'பாலாறும் தேனாறும் ஓடிய நம் தேசத்தில் 
இரத்த ஆறு ஓடும்படி சபித்தது யார் சொல் ?'
"உனக்கு இங்கை யாரும் சப்போர்ட்க்கு வரமாட்டினம். எங்களுக்கை அவ்வளவு understanding இருக்குது, ஒருத்தர் விசியத்திலை மற்றவர் தலையிடுறேயில்லை எண்டு.." நிறுத்தியவன்,

"என்னை என்ன விசரன் சும்மா அலம்புறான் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறியே..? நான் உந்த பாவம் எல்லாம் பாக்க மாட்டன்.. சொன்னா செய்திடுவன்" கைகளை முறுக்கியபடி நின்ற அவன் கண்கள் சிவந்துபோய் உண்மையாகவே கொலைவெறி தெரிந்தது.
'கள்ளி மேல் பூமலரும் ரோஜாவோ காய்ந்து தொங்கும் 
தேநீர்க் கோப்பையில் ரத்தம் தெறிக்கும் சாராயச் சிரட்டையில் பாசம் வழியும்!'
கண்களில் நீர்பெருக்கெடுக்க, தலைகுனிந்து, தனது கைகளிலிருந்த கோப்பையைப் பார்த்தாள்..  நிறைந்திருந்தது.. ரத்த நிறத்தில்..


***** 
தொடரும்..

கருத்துகள்

எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
>கண்களில் நீர்பெருக்கெடுக்க, தலைகுனிந்து, தனது கைகளிலிருந்த கோப்பையைப் பார்த்தாள்.. நிறைந்திருந்தது.. ரத்த நிறத்தில்..
---
சத்தியமாக இது விளங்கேல்ல , பினவீனத்துவமோ? :-) அல்லது பிளேன் டீ நிறமோ?
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
>கண்களில் நீர்பெருக்கெடுக்க, தலைகுனிந்து, தனது கைகளிலிருந்த கோப்பையைப் பார்த்தாள்.. நிறைந்திருந்தது.. ரத்த நிறத்தில்..
---சத்தியமாக இது விளங்கேல்ல , பினவீனத்துவமோ? :-) அல்லது பிளேன் டீ நிறமோ?

<< இது கொள்கைகள் சம்பந்தப்பட்டது தோழரே. அத்தியாயத்தை மீண்டுமொருமுறை படியுங்கள், காணோளியையும் போட்டுப் பாருங்கள் புரியும். நேரடியாக பலவிடையங்களைக் கூறமுடியாத ஒரு சமுதாயத்திலிருந்து இப்படிப்பட்ட குறியீட்டுப் படைப்புகள் தான் அதிகமாக இருக்கும். குழப்பத்துக்கு வருந்துகிறேன். :(
ஏ.எ.வாலிபன் இவ்வாறு கூறியுள்ளார்…
பல்கலைகழகத்தில்,
கன்டீனில் காலுக்கு மேல் கால் போட்ட படி, முன்னாலே junior பெண்ணொருத்தியை இருத்தினபடி,
அருந்தும் தேனிருக்கு பின்னல்,
நிறைய இரத்தம் சிந்தப்பட்டிருக்கும் (தேயிலையை பறிச்சதிலிருந்து camp அடிச்ச வரை) என்டறியாமல்;
pass papers படிச்ச அளவுக்கு மனிதரை + சமூகத்தை படிக்காத + சொல்லிக்கொடுக்கப் படாத;
இதுவரை ஒரு பெண்ணை அணுகியே அறியாத;
இந்த இருபதுகள் ஒரு பெண்ணை அணுக, பழக, ஆராய இருக்கும் சொற்ப வாய்ப்புகளையும் தான் குரூர சொற்கள் மற்றும் கண்கள் கொண்டு கிழிக்கும் சமூகம் - நுழையாது, வெளி இருந்து வியக்கும் - வளாக வேலிக்குள்;
வாய்ப்பு கிடைத்ததெண்டு வலிவு காட்டும் இழிவுக்கு;
எழும்பி அறையில அறையில பல்லுக் கழண்டு வருகிற ரத்தம் தேத்தண்ணியில தெறிக்குற மாதிரி -
கடுப்பில் வரும் நினைவை செய்யேலாத இயலாமைத் தடுப்பில் வழிகிறது கண்ணீர்....

ஜே.கே சொன்னது://எனக்கு புரிந்து விட்டது என்று நான் சொல்லும் போது உங்களுக்கு ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சொல்கிறேன்! அனுபவியுங்கள்!//

எனக்கு முழுசா + செரியா விளங்கீட்டுதா எண்டு தெரியேல்லை, இருந்தாலும் ஏதோ விளங்க முற்படுகிறான் வாசகன் என்பதே எழுத்தாளனை எகிறடிக்கும் இல்லை?
ஏ.எ.வாலிபன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னுமொன்று, நிறைய தேத்தண்ணிப் பேணிகளை அவசரப்பட்டோ, ஆறுதலாவோ, இரத்தத்தால் நிரப்பி இருக்குறம், நிரப்ப நினைத்து மறந்து/ஏலாம விட்டிருக்குறம்,
நிற்க, நிரப்புறது செரியா? பிழையா?: துரோகத்தின் பரிசா? இல்லை நயவஞ்சகத்தின் முதலடியா? எனக்கும் தெரியேல்லை.

நல்லாத்தான் முடிஞ்சிருக்குறீங்கள் சிண்டு.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//வாய்ப்பு கிடைத்ததெண்டு வலிவு காட்டும் இழிவுக்கு;
எழும்பி அறையில அறையில பல்லுக் கழண்டு வருகிற ரத்தம் தேத்தண்ணியில தெறிக்குற மாதிரி - கடுப்பில் வரும் நினைவை செய்யேலாத இயலாமைத் தடுப்பில் வழிகிறது கண்ணீர்....// :)

ஆரம்பத்தையும் முடிவையும் நல்லாவே ஆராஞ்சிருக்கிரீன்கள். ஆனால் நடுவில் கொடுக்கப்பட்ட தேநீரில் இருந்த நெகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆதங்கம், ஆவேசம் அதையெல்லாம் விட்டுடீங்களே..? அதுதானே கதையின் முக்கியகரு. என்னமோ சரி, ஏதோ நம்மடை எழுத்தையுமே ஆராஞ்சு/அறைஞ்சு பாக்கிறத்துக்கு எண்டு ஒரு வாசகன் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//அருந்தும் தேனிருக்கு பின்னல்,
நிறைய இரத்தம் சிந்தப்பட்டிருக்கும்
என்டறியாமல்; //

//எனக்கு முழுசா + செரியா விளங்கீட்டுதா எண்டு தெரியேல்லை, இருந்தாலும் ஏதோ விளங்க முற்படுகிறான் வாசகன் என்பதே எழுத்தாளனை எகிறடிக்கும் இல்லை?//

சரியாகச் சொன்னீர்கள்.. :)
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hmm..elegant way of writing. Nice
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
thank you saenthan

பிரபலமான இடுகைகள்