முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : நண்பன்

பாகம் ஏழு : நண்பன் 

"ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.." அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு.

சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை  அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஆண்கள் என்றாலே கதைப்பதற்கு தயங்கும் இவளுக்கு அந்தநேரத்தில் ஒரு ஆண் நண்பன் என்று இருந்திருந்தால் அது இவனாகத்தான் இருந்திருக்கும்.  அவளது வாழ்க்கையின் பல முக்கிய கட்டங்களில் இவனது பிரசன்னமும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறைதான் அவளது வாழ்க்கையே புரட்டிப் போட்ட சில முக்கிய காரணிகளில் ஒருவனாய் வந்தான். 

"இன்று முதியோர் இல்லத்துக்குப் போகிறேன், உனக்கு விருப்பமெண்டால் கூட வரலாம்." என்று அவன் சொன்ன போது, வீட்டில் சும்மாய் இருந்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் போய்ட்டுதான் வருவமே என்று தோன்றியது.  அவளது அப்பா பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாலேயோ என்னமோ, சின்ன வயதிலிருந்தே அவளுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமிருந்தது.

அவன் வரச்சொன்ன இடத்தை பஸ் அடைந்ததும், வெளியே பார்த்தாள். அவன் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். வழமையாய் அவன் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பைக்கை காணவில்லை. அவனது கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

"என்ன இடம் பக்கத்திலையா?"
"இல்லை, கொஞ்சத்தூரம் தான். நடந்தே போய்டலாம்" சரியென்று கூடவே நடக்கத் தொடங்கினாள். சிறுவயதில் ஒரு fantasyயாய்த் தொடங்கி இப்ப ஒரு சில நாட்களாய்த்தான் மனம்விட்டு பகிரக்கூடிய ஒரு நெருங்கிய நண்பனாய் ஆகிவிட்டிருந்தான். 

"அதிசயமாய் பைக்கை விட்டிட்டு வந்திருக்கிறீங்க?"
"சர்வீஸ்க்கு  விட்டிருக்கு. இன்னும் வரேல்லை."
"ஒ.. மற்றவங்களை எத்திட்டுப்போனா உங்கடை லவர் ஏதாச்சும் சொல்லுவாங்கள் எண்டுதான் விட்டிடு வந்தீங்களோ எண்டு நினைச்சன்."
"யார் லிசவா.. She is very broadminded"
அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.




"இன்னும் கனதூரம் நடக்க வேணுமே?" நேற்று  முழுக்க karate பயிற்சி. இன்றுதான் கால் நோகத் தொடங்கி இருந்தது. சும்மா வாழ்க்கைக்குதவாத ஒன்றைப் படிக்கப் போய் வீட்டில வந்து அதுநோவுது இதுநோவுது எண்டு படுத்துக் கிடக்கிறதுதான் மிச்சம். அம்மாவின் திட்டல் நினைவுக்குவந்தது.

"இல்லை கொஞ்சத்தூரம் தான்.." சிறிது தயங்கிவிட்டுப் பின், "ஆனா அதுக்கு முதல்ல வேறை ஒரு இடத்துக்குப் போறம்"
"எங்க?"
"உனக்கு பிடிச்ச இடம் தான். போன பிறகு தெரிந்து கொள்ளுவாய் தானே.."
அதற்குமேல் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சிறுவயதுக் கதைகளின் சுவாரசியத்தில்  மூழ்கிவிட்டிருந்தாள். அதே டீச்சர்தான் இவளது எழுத்தைக் கிண்டல் பண்ணி 'மாட்டுக்கொட்டில்' என்றதும், அதுக்கு அவள் அழுததும், பிறகு அவரே வந்து சமாதனப் படுத்தியதும். எவ்வளவு நல்ல டீச்சர் மாணவர்களுடன் தானுமொருவராய் இருந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார். இதுவரை அவரிடம் படித்த யாருமே அவவை மறந்ததில்லை.

அந்த உச்சி வெயிலிலும் கடற்கரைக் காற்று சில்லென்று உடம்பில் படத்தான் எங்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. ஆனால் ஏன் இங்கு கூட்டிவந்தான் என்று தான் புரியவில்லை. ஒருவேளை சுதாவை வரச்சொல்லியிருப்பானோ? ஒரு நிமிஷம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனால் அடுத்த நிமிசமே, அப்படி வந்தாலுமே.. "இட்ஸ் டூ லேட்".. காரணம் இவனுக்கும் தெரியும்.  கண்ணீர்த்திரை கண்களை மறைத்தது.

யாரோ ஒருபெண் சிங்களத்தில் திட்டும் சத்தம் கேட்டு திரும்பியவளின் நெற்றியில் விழுந்த முடியை ஓரமாய்த் தள்ளிவிடும் அளவுக்கு, அந்த கடற்கரைக் காத்துக்கு வலிமையிருக்கவில்லை. 


"டக்.. டக்.." கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தால் நேரம் நண்பகலைத் தாண்டியிருந்தது. எழுந்துசென்று கதவைத் திறந்தாள்.
"சாப்பாடு கொண்டந்திருக்கிரன். நீங்க மரக்கறிதானே?" ரூம் பாய் தான்.
ஓமெண்டு தலையை ஆட்டினாள்.
"முதலாளிக்கு தெரியேல்லை. அதுதான் போன் பண்ணினவர். ஆனா நீங்கள் எடுக்கேல்ல. அதான் எதுக்கும் இரண்டையும் கொண்டு வந்தனான்." என்று சொல்லிவிட்டு மேசையில் அடுக்கினான். அவளுக்குச் சாப்பிடவே மனமில்லை. ஆனால் திருப்பிக் கொண்டு போகச்சொன்னால் திரும்ப அந்த மேனேஜர் போன் பண்ணி ஏனெண்டு கேப்பான். அவள் இன்றைக்குக் காலமை இங்கை வந்ததிலிருந்து இதுவரைக்குமே ஒரு மூன்று தரம் போன் பண்ணியிருப்பான். 

பின்ன என்ன, விடியக்காலமை எழும்பி அவன் சுவாமிக்கு விளக்கு வைக்க முன்னமே வந்து நிண்டு ரூம் இருக்கா எண்டு கேட்டால் யாருக்குதான் சந்தேகம் வராது? பின்னால் எட்டிப் பார்த்தால், அவள் வந்த ஓட்டோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தனிய வந்திருக்கிறாள், யாரும் கூட வரவில்லை.

"எங்கயிருந்து வாறீங்கள்?"
"கொழும்பிலிருந்து.." திகைத்துப் போய் அவளைப் பார்த்தான். எந்த சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.
பேசாமல் புத்தகத்தை எடுத்து பதியத் தொடங்கினான். வழக்கமான கேள்விகள்.
"வந்ததுக்கான கரணம்?"
"வன்னிக்குப் போகவேணும். அதுவரைக்கும் இங்கைதான் நிப்பன்." அதிர்ந்தான். இன்னும் கொஞ்சம் பிலத்து சொல்லியிருந்தால் இதில ஒரு பிணம் விழுந்திருக்கும். ஓடிப்போய் வெளியே பார்த்தான். நல்லகாலம், சென்றிப் போயன்ட்ல நைட் duty ஆமிக்காரன் போய்விட்டிருந்தான். மற்றவன் இன்னும் வரவில்லை. நிம்மதிப் பெருமூச்செடுத்தவாறு உள்ளேவந்து அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்தான். 

கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்தாள். அதுக்கு மாட்சிங்கா வெள்ளையில் கறுப்புப் புள்ளிவைத்த டாப். தோளில் ஒரு சின்ன கறுத்தப் பை, அவ்வளவுதான். ரெண்டு நாளிலே பாஸ் கிடைத்துவிடும் எண்டு நினைத்துக்கொண்டு வந்திருக்கிறாளா என்ன? அதுக்கெல்லாம் எவ்வளவு நாள் அலையவேணும். ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. எதோ பயங்கரத் திட்டத்தில் வந்தவள் போல இருந்தது. கரும்புலியாய் இருக்குமோ?

"IC  இருக்கா?" ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் குடுத்தாள். வியப்பாக இருந்தது அவனுக்கு. 
IC  என்பது ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் எவ்வளவு முக்கியம் எண்டு எல்லாருக்குமே தெரியும். அதுமட்டும் இல்லை எண்டால் அவன் செத்ததுக்குச் சமன். அதை இப்படிப் பொறுப்பில்லாமல் வெறுமனே பாக்கெட்க்குள்  வைத்துக்கொண்டு வாறாள் எண்டால்..
"எத்தினை நாளைக்கு இப்ப புக் பண்ணுறது?"
"அஞ்சு நாள்."
"ஒருநாளைக்கு சப்பாட்டோடை சேத்து எழுநூத்தைம்பது ஆகும்... ரெண்டுநாள் அட்வான்ஸ்.." முடிக்கவில்லை,  அடுத்த பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் எண்ணாமலேயே.  ஆயிரத்து ஐநூறு சரியாய் இருந்தது. 

பதிந்த துண்டையும், சாவியையும் எடுத்துக் கொடுத்தான். 
"இப்பிடியே மேலை போய் இடதுபக்கம் திரும்பினா ரூம் வரும்.. டே.. இங்கவா.. இவ கூடப் போய் கொஞ்சம்  ரூமைக் காட்டிவிடு. அப்பிடியே என்ன சாப்பாடு எண்டு கேட்டு குடு."
"நான் இப்பதான் சாப்பிட்டு வந்தனான். அதால வேண்டாம்.."
"சரி, அப்ப மத்தியானத்துக்கு கொண்டே குடு."என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் போய் விட்டிருந்தாள்.

இவளில் ஒரு கண் வைக்க வேண்டும் என்று அப்பமுடிவு பண்ணி தான் இப்படி அடிக்கடி போன் பண்ணுறான். பேசாமல் போனை எடுத்து வெளியே வைக்கலாம் எண்டு பாத்தாலும் எங்க ரூமுக்கே வந்துவிடுவானோ எண்ட பயத்திலை பேசாமல் விட்டுவிட்டாள்.

தாகமாயிருந்தது. நேற்றிரவு ட்ரெயினில் அவன் குடித்துவிட்டுத் தந்த தண்ணீர்ப் போத்தல் அப்படியே இருந்தது. எடுத்து அடியில் பார்த்தாள், எதுவுமில்லை. மெலிதாகச் சிரித்துக்கொண்டே கொஞ்சம் குடித்த போது, அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் வந்துவிட்டது  உறைத்தது. என்ன நினைத்திருப்பான்? 


*****

தொடரும் ..


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்