முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : தயக்கம்

பாகம் ஐந்து : தயக்கம் 

இப்ப கொஞ்சநாளாய் தினமும் விரிவிரை முடிந்ததும் சிலமணிநேரம் Arts Faculty Gymல போய் பாட்மிண்டன் விளையாடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் 'டபுள்ஸ்' விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நண்பர்களின் கேலி கிண்டல் இன்றைக்கு வழக்கத்துக்கு மாறாய் புதிதாய் இருந்தது. அவன் அடித்த டாஷ் கோட்டுக்கு வெளியே போய் விழுந்தபோது,

"டேய் அவளண்ட மூஞ்சிய பாத்துக்கொண்டு அடிக்காம பூவப் பாத்து அடிடா.." நண்பர்களின் கிண்டல் தாங்காமலோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவன் தலை இடிப்பதாய் சொல்லிவிட்டு இளைப்பாறப் போய்விட்டன். அவளும் உஷாவும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிஷம் கூட முடிஞ்சிருக்காது, 

"தா.. நான் விளையாடப் போறன். நீ போய் இரு." என்று அவளிடம் Racketஐ பறிக்கும் போது அவன் கரம் வேண்டுமென்றே அவளின் கையை இறுகப் பற்றியது. உஷாவைப் பார்த்தாள். 
"போய் இரு, கொஞ்சநேரத்தில வாறன்." என்றாள் மெல்லிய புன்னகையையுடன். அங்கு இருக்கப் பிடிக்காமல் கான்டீன் போய் உட்கார்ந்தாள்.

"என்ன பொறாமையா இருக்கா?" கேட்டது ரஞ்சன்தான். 
"இவ்வளவு நேரமும் எங்க போயிருந்தநீ?"
"ஏன் என்னாச்சு?"
"என்ன ஆகணும்? நான் அவனோட தனிய கதைச்சே ஆகணும். இன்னிக்கே இப்பவே." 
"இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணு நான் எல்லாம் சரிபண்ணிடுரன்"
"நீ ஒண்டும் பண்ண வேண்டாம். அவனை இப்ப வரச்சொல்லுரியா இல்லை நான் போகட்டா?"
"சரி நீ போ.. நான் அனுப்பிவிடுறன்."
எங்கே போவது? எழுந்து கான்டீன் ஓரமாய் மெதுவாய் நடந்தாள்.

"நீ எதோ கதைக்க வேண்டும் எண்டு சொன்னனீ எண்டு ரஞ்சன் சொன்னான்." கடுகடுன்னு அவன் குரல் பயமுறுத்தியது.
"அது வந்து..." இதுவரை இருந்த தைரியம், கோபம் எல்லாம் காத்தோட போய் தொண்டை வரண்டது.
"என்ன கெதியா சொல்லு, நான் விளையாடப் போகணும். பாதில விட்டிட்டு வந்திருக்கு." தொனியில் சிறிதும் மாற்றமில்லாது. இவனுக்கு இதயமே இரும்பிலதான் செய்துவச்சிருக்குதோ? எப்படி இவ்வளவு  கறாராய்ப் பேசுகிறான்? தப்புப் பண்ணின இவனுக்கே இப்படி எண்டா எனக்கு எவ்வளவு இருக்கவேணும்.

"ஒண்டு சொல்லுவன். கோபப்படக் கூடாது." தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருவாறு சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா எண்டு பார்த்தாள். உண்மைதான் தலைக்குப் பின் ஒரு சிறிய ஒளிவட்டம் தோன்றி இருந்தது.
"அது நீ என்ன சொல்லுகிறாய் எண்டதைப் பொறுத்து." இந்த விதண்டாவாதம் அவன் கூடவே பிறந்தது போல. ஆனாலும் குரல் கொஞ்சம் இளகியிருந்தது.
"நீங்க தந்த மியூசிக் CD உடைஞ்சு போட்டுது." வேண்டுமென்றே சீண்டிவிட்டுப் பார்த்தல் அவள் எதிர்பார்த்தது போலவே அந்த ஒளிவட்டம் போய் முகம் மீண்டும் கடுகடுன்னு ஆகிவிட்டிருந்தது.

அது இசைஞானி இளையராஜாவின் இசைத் தொகுப்பு, தரும்போதே எதோ தன்ர காதலியின் முதல் பரிசை கடன் கேட்டமாதிரி நிறையவே தயங்கிப் பிறகு நூறுவாட்டி பத்திரம் சொல்லித்தான் தந்திருந்தான். இப்போது இப்படி உடைத்துவிட்டு வந்தால் கோபம்வராதா என்ன. ஆனால் அவள் நினைத்ததுபோல் அவனொன்றும் வசைமாரி பொழியவில்லை. மாறாக கடும் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இப்போது அந்த CD எப்படி உடைந்ததென்று சொல்லியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவளின் தலை வெடித்துவிடும்.

"உங்களால்தான் அது உடைந்தது."
'எப்படி?' அவன் கேட்கவில்லை. ஆனால் புருவநெரிசல் சொல்லியது.
"அன்னிக்கு எனக்கு ஐஸ்கிரீம் கொண்டுவந்து தந்துவிட்டு, பிறகு ஏன் வாங்கி அவவுக்கு குடுத்தனீங்க?" படபடவேண்டு பொரிந்ததால் மூச்சு முட்டியது. சிறிது நிறுத்தி,
"அதுதான் எனக்கு கோவம் வந்து bagஐ தூக்கி போட்டனான் எல்லே. அப்பத்தான் உடைஞ்சு இருக்கவேணும். பிறகு வீட்டை கொண்டுபோய் பார்த்தபோதுதான் தெரிந்தது. ஆனால் உங்களிட்டை எப்படி சொல்றது எண்டு பயத்தில சொல்லவில்லை." பரிதாமாய்ப் பார்த்த அவளை திட்டுவதுக்குப் பதிலாய் விழுந்து விழுந்து சிரித்தான். இப்போது அவள் புரியாமல் விழித்தாள்.

"உனக்கு எதுக்கு கோவம் வரவேணும்? நான் பிறகு இன்னுமொண்டு கொணந்து தந்தனான் தானே? நீ தானே வேண்டாம் எண்டுவிட்டுப் போய் விட்டாய்?"
"ஆனால்.. அது எப்படி என்னட்டை இருந்து வாங்கி அவக்கிட்டை குடுக்கலாம். அதாலதான்..?" சின்னப் பிள்ளைத்தனமாய் இருந்தது அவளது வாதம்.
"சரி விடு. இதைச்சொல்லத்தான் கூப்பிட்டியா? ரஞ்சன் எங்க போனான்?"
"ரஞ்சன்தான் எங்களை முன்னால போகச்சொன்னான். தான் பின்னால வாறன் எண்டவன்." பொய் சொன்னாள்.

"ஓ.. நீ எதோ கேக்கவேணும் எண்டு சொன்னனீ எண்டெல்லோ சொன்னவன்." கேட்டேவிட்டான். இனித் தப்பிக்க முடியாதே. அவனை மாட்டிவிட வந்து இப்போது அவள் நல்லா மாட்டுப்பட்டதுபோல் உணர்ந்தாள். இவன் சரியான வாய் வித்தைக்காரன். எதைச்சொன்னாலுமே கடைசியில அதை எங்களுக்கே எதிராய்த் திருப்பிவிடக்கூடியவன். கொஞ்சம் எச்சரிக்கையைத்தான் கேக்கவேணும்.
"அது வந்து.. தாகமாய் இருக்கு கொஞ்சம் ஏதாச்சும் குடிச்சிட்டு கதைக்கலாமே?"

இருவரும் அருகிலிருந்த Management Faculty கண்டீனை நோக்கிப்  போவதை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உஷாவும் ரஞ்சனும் தமக்குள் சிரித்துக்கொண்டார்கள்.


*****

தொகுதி ஒன்று நிறைவடைகிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்